Published : 29 Jun 2015 12:25 PM
Last Updated : 29 Jun 2015 12:25 PM
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் இன்று (திங்கள்கிழமை) பகல் 12.10 மணியளவில் தொடங்கிவைத்தார்.
முதல்வர் கொடியசைத்து வைக்க ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
மேலும், கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம் (சிஎம்பிடி), அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களையும் கோயம் பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணிமனையையும் முதல்வர் திறந்துவைத்தார்.
தொடக்க விழாவையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் முதல் பயணத்தை காண ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தினர்.
சிறப்பு வீடியோ பதிவு
மாநில அரசின் பங்களிப்பு:
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரண்டு வழித்தடங்களில் – அதாவது வழித்தடம் - 1 (23.085 கி.மீ.) வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலும், வழித்தடம் -2 (21.961 கி.மீ.) சென்னை சென்ட்ரலிலிருந்து புனித தோமையார் மலை வரையிலும் சென்னை மெட்ரோ ரெயில் இயங்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.
மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒப்புதலளித்தபடி இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான உத்தேசச் செலவு 14,600 கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசு திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதத்தைப் பங்கு மூலதனமாகவும், 5 சதவீதத்தைச் சார்நிலைக் கடனாகவும் வழங்குகிறது.
அதே போன்று மாநில அரசும் திட்ட மதிப்பீட்டில் 15 சதவீதத்தைப் பங்கு மூலதனமாகவும், 5.78 சதவீதத்தைச் சார்நிலைக் கடனாகவும் அளித்து வருகின்றது. மீதமுள்ள 59.22 சதவீதம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகின்றது.
மாநில அரசு தனது பங்குத் தொகையை ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கி வந்துள்ளது. மாநில அரசு தனது பங்கு முழுவதையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கிவிட்டது.
2007-08 முதல் 2010-11 வரையில் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை 1,143.31 கோடி ரூபாய் ஆகும். தற்போது வரை செலவிடப்பட்ட தொகை 10,751.94 கோடி ரூபாய் ஆகும். அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9,608.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மே, 2011 இல் 3 சதவீதமாக இருந்த ஒட்டு மொத்த செயலாக்க சாதனை 76 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்குத் தேவையான அரசு நிலங்களை மாற்றுதல், நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளை மாற்றியமைத்தல் மற்றும் பல்வேறு சட்டப்படியான ஒப்புதல்களை பெறுவதற்கு மாநில அரசும் அதன் சார்பு நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை நல்கி வந்துள்ளன.
6.11.2013 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரேசிலிருந்து பெறப்பட்ட முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தைக் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் 110/33 கி.வோ உயர் மின் அழுத்த துணை மின் நிலையத்தையும் துவக்கி வைத்தார்.
மெட்ரோ ரயில்வே (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002, பிரிவு 7 இன் கீழ் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர், பெங்களூரு அவர்களை சென்னை மெட்ரோ ரயிலின் ஆணையராக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அவர் அச்சட்டத்தின்படி ஆய்வினை மேற்கொண்டு மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதன் பாதுகாப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் பயணம். | படங்கள்: வீ.கணேசன்
ரயில்வே அமைச்சகம் (ரயில்வே வாரியம்) சில தொழில்நுட்பங்களைக் கையாளுகின்றது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரிடம், மெட்ரோ ரயிலில் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டிகள் குறித்து ஆலோசனை நடத்தி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆணையர் இறுதி ஆய்வுகளை கடந்த மாத இறுதியில் மேற்கொண்டு, தேவையான சட்டபூர்வமான பாதுகாப்பு அனுமதியை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயிலின் பயணிகள் சேவையைக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உடன், சென்னை மெட்ரோ ரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களையும் துவக்கி வைத்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருமடங்கு செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி:
மாற்றுத்திறனாளிகள் தாங்கள் இறங்கும் நிலையங்களில் ரயில் கூடுதல் நேரம் நிற்க வேண்டும் என விரும்பினால், அதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பொத்தானை (long-stop button) அழுத்தினால் ரயில் கூடுதலாக சில நொடிகள் அங்கு நிற்கும். இதேபோல், மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்காக ரயில் நிற்கும் இரு முனைகளிலும் தலா 2 தள்ளுவண்டிகள் தயார் நிலையில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT