Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் மத்திய அரசு நிறுவனம்

சென்னையில் உள்ள மத்திய அரசின் நிறுவனமான ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வளிக்கும் சேவையை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர் இந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியோர்.

உலக மக்கள்தொகையில் 15% மக்கள் ஏதேனும் ஒரு வகையில் ஊனத்தால் பாதிக்கப்பட்டு, வாழ்நாளைக் கடத்த பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர். இதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் இவர்களில் 20% பேர் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இந்தியாவில் 7 கோடி பேர்

இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் சில பிரிவினருக்கு தங்களது வேதனைகளைக் கூட பிறரிடம் சொல்லி அழவும், வழிதேடவும் இயலாத திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தங்களது வாழ்வில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளை விழி இழந்தோர், காது கேளாதோர், மூளை முடக்குவாதம், மனவளர்ச்சிக் குன்றியோர், ஆட்டிசம் எனப்படும் புற உலகச் சிந்தனை இல்லாதோர் என பல வகைகளில் வகைப்படுத்தலாம்.

இவர்களின் நல்வாழ்வுக்கென மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், உதவிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

இதிலும் குறிப்பாக, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தலுக்கான அமைச்சகத்தின் சார்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டு சேவையாற்றி வருகிறது. பல்வேறு தேசிய விருதுகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

பல்வேறு சேவைகள்

இங்கு, மறுவாழ்வு மருத்துவம் (Physical Medicine and Rehabilitation), மறுவாழ்வு உளவியல் (Rehabilitation psychology), ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி (Vocational Training), பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப்

பயிற்சி (Speech, Hearing, Communication), சிறப்புக் கல்வி (Special Education), கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை(Deaf blind), இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம் (Physiotheraphy and Occupational Theraphy), 0-3 வயதில் தொடக்கக் கால பயிற்சி (Early Intervention), செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல் (Prosthetics and Orthatics), உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி (Sensory Intergration), சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் Community Based Rehabilitation) ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரிப் பள்ளி ஒன்றும் நடத்தப்படுகிறது.

2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டாலும், மாற்றுத் திறனாளி குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படும் பெரும்பாலான பெற்றோருக்கு இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த சிறகுகள் சிறப்புக் குழந்தைகள் பெற்றோர் சங்கத்தின் இணைச் செயலர் கே. நன்மாறன்.

அவர் மேலும் கூறியது: “இந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்காக சென்ற பின்னர் தான் இதன் சிறப்பான செயல்பாடுகள் தெரியவந்தன. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளியான எனது மகளுடன் கடந்த மாதத்தில் 5 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றேன். உண்மையில் முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் இந்த நிறுவனம் செயல்படுவது பாராட்டுக்குரியது.

வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

இதன் சிறப்பு என்னவெனில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு ரூ.5 பதிவுக் கட்டணத்திலும், வசதி படைத்தோருக்கு பெயரளவுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெற்றோர் அங்கேயே தங்கிக் கொள்ளவும் வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு” என்றார் அவர்.

இந்த வாய்ப்பை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தை www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், 044 - 27472113, 27472046, 27472389 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x