Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM
தெலுங்கு மொழி பேசும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி கோவையில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், புதிய கட்சியை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
அக்கட்சிக்கான கொடி, தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், தொடக்க விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கட்சியின் நிறுவனத் தலைவராக சி.ஜெ.ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய கட்சியை தொடங்கி வைத்த ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்கள், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட மக்களிடத்தில் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு ரீதியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்காக 34 பெயர்களைக் கொண்ட சமூகத்தினரை இணைத்து புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்றது முதல் தமிழகத்தை 3 கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன. தெலுங்கு மொழி பேசும் ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் என பலர் ஆளும் ஆட்சிகளில் இருந்தும் இந்த மக்களின் சமூக பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால், அவர்களது பிரச்சினை கண்டு கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் தெலுங்கு மொழியில் படிப்பதற்கான வாய்ப்பு கூட ஏற்படுத்தப்படவில்லை. எனவே, தெலுங்கு மொழி பேசும் மக்களை ஒன்றிணைத்து குரல் எழுப்ப புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், பாமக தலைவர் ஜி.கே.மணி, கொங்குநாடு ஜனநாயக கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT