Published : 09 Jun 2016 12:16 PM
Last Updated : 09 Jun 2016 12:16 PM

தானும் தோற்று, நத்தத்தையும் பறிகொடுத்ததால் நடவடிக்கை: விசுவநாதனுக்கு பறிபோனது பதவி

அதிமுகவிலும், ஆட்சியிலும் வலுவாக இருந்த நத்தம் ஆர்.விசுவநாதன் ஆத்தூர் தொகுதியில் தானும் தோற்று, நத்தம் தொகு தியையும் பறிகொடுத்ததால் கட்சிப் பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிபுரிந்த கடந்த 5 ஆண்டுகளில் கடைசிவரை தொடர்ந்து அமைச்சர் பதவி வகித்த ஒரு சிலரில் ஆர்.விசுவநாதனும் ஒருவர். அதிமுகவின் நால்வர் அணியில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார் இவர். இத்துடன் மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்ட செயலராகவும் பதவி வகித்தார். அமைச்சர், நால்வர் அணி, மாவட்டச் செயலர் என கட்சியிலும், ஆட்சியிலும் வலு வாக இருந்த விசுவநாதன் மீது தலைமைக்கு ஆட்சி முடியும் தருவாயில் அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் வந்தபோது விசுவநா தனுக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம், கட்சியினர் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களிடமும் ஏற்பட்டது. நத்தம் தொகுதிக்கு கட்சியில் சிலரை நேர்காணலுக்கு அழைத்தபோது நத்தம் தொகுதி இவருக்கு இல்லை என உறுதியானது. ஆனால், ஆத்தூரில் இவரை போட்டியிடச் செய்தது கட்சித் தலைமை. ஆத்தூரில் தனது முழுபலத்தைச் செலவழித்தும், கடும் முயற்சி மேற்கொண்டும் இ.பெரியசாமியிடம் தோல்வி யையே காணமுடிந்தது.

தொகுதி உருவானது முதல் 39 ஆண்டு காலமாக வெற்றியே கண்டிராத திமுக முதன்முறையாக நத்தத்தைக் கைப்பற்றியது. மேலும் கட்சியைப் பலப்படுத்துவதற்கு முயற்சிக்காமல், மாவட்டத்துக்குள் அமைச்சர் என்ற தோரணையில் மட்டுமே விசுவநாதன் வலம் வந்துள்ளார் என்ற தகவல் தலைமைக்கு சென்றது. தற்போது எம்எல்ஏ பதவியில்கூட இல்லாத இவர் மாவட்டச் செயலர் பதவியை கொண்டு, கட்சியினருக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்ற நிலையில் இவரது மாவட்டச் செயலர் பதவியையும் பறித்து கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

கட்சியினரின் சென்டிமெண்ட்

மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கட்சி அலுவலகம் கட்டினால் பதவி பறிபோகும் என ஒரு சில மாவட்டங்களில் கட்சியினரின் சென்டிமெண்டாக இருந்தது. இந்த சென்டிமெண்டை கருத்தில்கொண்டு அதிமுக இதற்கு முன் 3 முறை ஆட்சியில் இருந்தபோதும் கட்சிக்கு சொந் தமாக அலுவலகம் திண்டுக் கல்லில் கட்டப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை வாடகைக் கட்டிடத்தில்தான் மாவட்ட தலைமை அலுவலகம் இயங்கிவந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் புதிதாக அதிமுக மாவட்ட தலைமை அலுவலகம் கட்டப்பட்டு விசுவநாதன் தலைமையில் திறப்புவிழா காணப்பட்டது. கட்சி அலுவலகம் கட்டியதுதான் விசுவநாதனின் இறங்குமுகத்துக்கு காரணம் என இன்றும் அவரது விசுவாசியாக இருக்கும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x