Published : 24 Jun 2016 07:58 AM
Last Updated : 24 Jun 2016 07:58 AM

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து: அதிமுக, திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி வழக்கு

அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் செலவை அதிமுக, திமுக வேட்பாளர் களிடமும், தஞ்சாவூர் தொகுதி செலவை அதிமுக வேட்பாளரிடமும் வசூலிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இத்தொகுதிகளின் பாமக வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில், அரவக்குறிச்சி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாமக வேட்பாளர் ஜி.குஞ்சிதபாதம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், அவர்களுக்கு வேண்டியவர்களிடம் இருந்து பெரு மளவு பணம் பறிமுதல் செய்யப் பட்டதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்ததால் இத்தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது போல அதிமுக வேட்பாளர் ரெங்க சாமி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

‘தேர்தல் செலவு, மற்ற வேட்பாளர்கள் செலவு செய்த தொகை என மொத்தத் தொகையும் அதிமுக, திமுக வேட் பாளர்களிடம் வசூலிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும். அது வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது’ என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம். ஆனால், அந்த மனுக்கள் பரிசீலிக் கப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

போட்டியிட தடை

எனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்துக்கு காரணமான அதிமுக, திமுக வேட்பாளர்களிடம் தேர்தலுக்கான மொத்த செலவுத் தொகையையும் தேர்தல் ஆணையம் வசூலிக்க வேண்டும். அதுவரை அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆலோ சனை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்களின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க விரும் புகிறதா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதையடுத்து தேர்தல் ஆணையத்துக்கான நோட்டீஸை, அதற்கான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் பெற்றுக் கொண்டார். அதிமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x