Published : 30 Jun 2017 02:42 PM
Last Updated : 30 Jun 2017 02:42 PM

தமிழக நீர்நிலைகளைப் பராமரிக்க பிரதிநிதிகள் குழுவை அமைத்திடுக: வாசன்

தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் அரசின் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழக அரசு நீர் நிலைகளை முறையாக பராமரிக்காததும், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்காததும், புதியதாக அணைகள், தடுப்பணைகள் கட்டாததும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெற்றுத்தராததும் தான் காரணமாக இருக்கின்றது.

தமிழகத்தில் சுமார் 17 பெரிய ஆறுகளும், 100 சிறிய கிளை ஆறுகளும், 18,789 பெரிய ஏரிகளும், 20,413 குட்டைகளும் இருக்கின்றன. இவை எல்லாம் இருந்தும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு சரியான குடிமராமத்துப் பணிகளை தொடர்ந்து செய்திருக்க வேண்டும். நீர் நிலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றியிருக்க வேண்டும். மணல் திருட்டை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

தொழிற்பேட்டைகளுக்காக மரம், செடி, கொடிகளை, காடுகளை அழிக்கும் போக்கை தவிர்த்திருக்க வேண்டும். மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயச் சூழலில், வெட்டிய பிறகு வேறு இடங்களில் மரங்கள் நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மேலும் வெள்ளம் ஏற்படும் போது காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி போன்ற ஆறுகளில் இருந்து மட்டும் உபரி நீராக, கடலில் சென்று வீணாக கலக்கின்ற தண்ணீரின் அளவு சுமார் 200 டி.எம்.சி. இந்த தண்ணீரையும் தேக்கி, சேமித்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இப்பணிகளை எல்லாம் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் செய்ய தவறிவிட்டார்கள். இனிமேலாவது தமிழக அரசு தண்ணீர் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும்.

நீர் ஆதாரத்தை முறையாக சேமிக்காமல், பராமரிக்காமல், பாதுகாக்காமல் இருந்த காரணத்தினால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் அரசின் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் அந்தந்த மாவட்டப் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க, பெருக்க, மழை நீர் சேகரிப்பு முறையை தொடர்ந்திட அந்தந்த பகுதிளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலம் தோறும் தமிழகத்தின் விவசாயத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் தண்ணீரின் தேவையை, அவசியத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அனைத்து நல்ல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தொடர்ந்து பெறுவதற்கு உரிய நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x