Published : 27 Jun 2016 02:47 PM
Last Updated : 27 Jun 2016 02:47 PM

சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறைக்கு மாற்றம்; 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு விசாரணை, சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கே.பி.எஸ். தேவராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் கொண்ட 25 பேர் குழு விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையில் சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் போலீஸாரும் உதவிபுரிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக விசாரணையின் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதாவது, ரயில்வே போலீஸும், சென்னை நகர போலீஸ் துறையும் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதை விளக்குமாறு அரசு வழக்கறிஞரை கேட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் சென்னை நகர போலீஸ் சட்ட எல்லைக்குள் இல்லை என்று சென்னை போலீஸ் ஆணையார் டி.கே.ராஜேந்திரன் கூறியது ஒரு ஆங்கில நாளிதழில் வந்ததையடுத்து தாங்களாகவே கவன ஈர்ப்பு மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை ஒருங்கிணைப்பு குறித்து விளக்கம் தேவை என்று அரசு வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு மதியம் 3 மணியளவில் அரசு வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் விசாரணையின் ஒருங்கிணைப்பு குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

நீதிமன்றத்துக்கு சமூகப் பொறுப்பு உள்ளது என்றும் தன்னிடம் வரும் வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்ற வரையறை இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை காவல்துறைக்கு விசாரணை மாற்றம்:

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரயில்வே போலீஸ் விசாரித்து வந்த நிலையில், அதில் திருப்திகரமான முன்னேற்றம் தெரியவில்லை என்ற அதிருப்தி எழுந்தது.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னை காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே டிஐஜி பாஸ்கரன் தகவல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x