Published : 25 Mar 2017 08:19 AM
Last Updated : 25 Mar 2017 08:19 AM

நாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு: தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது- சிபிஎஸ்இ அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய 8 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடக்க உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

10 மொழிகளில் தேர்வு

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 80 நகரங்களில் தேர்வு நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 23 நகரங்கள் இப்பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது.

கடந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு தாங்களாகவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தின. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த ஆண்டில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் கலந்தாய்வு மூலமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x