Published : 03 Apr 2017 09:03 AM
Last Updated : 03 Apr 2017 09:03 AM

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசலில் மீண்டும் போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மீண்டும் போராட்டம் நடத்த நெடுவாசல் கிராம மக்கள் நேற்று முடிவெடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளதாக கடந்த பிப்.15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிப்.16-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நெடுவாசலில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, மார்ச் 27-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் நெடுவாசல் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆலோசனைக் கூட்டம்

இந்நிலையில், நெடுவாசலில் உள்ள நாடியம்மன் கோயில் வளா கத்தில் நேற்று திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரை சந்தித்த குழுவினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாள் முழுக்க தொடர் போராட்டம் நடத்துவது, நெடுவாசல் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களின் ஆதரவுடன் பல்வேறு இடங்களில் போராட்டத்தை விரிவுபடுத்துவது, ஏப்ரல் 6-ம் தேதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்தநாளில் போராட்டம் குறித்து அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக நெடுவாசல் மக்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x