Published : 25 Jan 2017 09:10 AM
Last Updated : 25 Jan 2017 09:10 AM
ஜல்லிக்கட்டு, காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.
ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்தா புயல், வறட்சி பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பிரணாப் முகர்ஜியுடம் அவர்கள் மனு அளித்தனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT