Last Updated : 08 Jun, 2016 08:29 AM

 

Published : 08 Jun 2016 08:29 AM
Last Updated : 08 Jun 2016 08:29 AM

திட்டமிட்டு திமுக வதந்தி பரப்புகிறது: விஜயகாந்த், வாசன் குறித்து தவறாக பேசவில்லை - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.

மதிமுக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம் கடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் பேசிய வைகோ, ‘விஜயகாந்தும், ஜி.கே.வாசனும் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். அதைப்பற்றி கவலை இல்லை. அவர்களை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று கூறியதாக செய்திகள் வெளியா கின. இதனால், ம.ந.கூட்டணியில் இருந்து தேமுதிகவும் தமாகாவும் விலகுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியது குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

தேர்தல் காலங்களில் திமுகவினர் என் மீது இதுபோன்ற நச்சுக்கணைகளை ஏவுவது வழக்கம். எனவே, ஆரம்பத்தில் இந்த சர்ச்சை குறித்து பதில் சொல்லாமல் தவிர்த்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் இந்த விஷயம் பூதாகரமாகி வருகிறது. எனவே, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது, நான் என்ன பேசினேன் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

அந்தக் கூட்டத்தில், ஒரு சில மாவட்டச் செயலாளர்களைவிட பெரும்பாலானவர்கள், தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியை உருவாக்கி வழிநடத்திச் சென்றதற்காக என்னை பாராட்டினர். நான் பேசியபோது, ‘கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி மதுரையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நானும் விஜயகாந்தும் ஒன்றாக வந்தோம். அவர் பேசியதிலிருந்து அவரது மனநிலை திமுக, அதிமுகவுக்கு எதிராக உள்ளதை சூசகமாக உணர்ந்து கொண்டேன்.

ம.ந.கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் கட்சிக்கு இருவர் என தனித்தனியாக பேசி, தேமுதிக, தமாகா வந்தால் கூட்டணி வலுப்பெறும் என்று முடிவெடுத்தோம். இது தொடர்பாக 3 முறை விஜயகாந்துடனும், பிரேமலதாவுடனும் பேசினேன். கூட்டணியில் இணைப்பதற்காக பாஜக பல அழுத்தங்களை தந்தது. திமுக தரப்பில் 80 தொகுதி மற்றும் பெரும் தொகை என்று சிலர் முயற்சித்தனர். அந்த செய்தியை கொண்டு வந்த நபரைக்கூட விஜயகாந்த் சந்திக்கவில்லை. அவற்றையெல்லாம் புறக்கணித் துவிட்டு எங்களுடன் கூட்டணி சேர்ந்தார். சொன்ன சொல்படி உறுதியான நேர்மையுடன் நடக்கும் விஜயகாந்தின் நடவடிக்கைகளைக் கண்டு அவர் மீதான மதிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் கூட்டணி பேச்சு வார்த்தைகளின்போது மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். நாங்கள் கேட்ட பல தொகுதிகளை விட்டுக் கொடுத்த அவர், அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். எனவே, ஜி.கே.வாசன் மீதும் எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதை யும் உள்ளது’ என்றுதான் பேசி னேன். ஆனால், என் மீது களங்கத்தை ஏற்படுத்தவே, விஜயகாந்தும் வாசனும் போனால் போகட்டும் என்று நான் கூறியதாக திமுக திட்டமிட்டு வதந்தி பரப்புகிறது. அப்படி எதையும் நான் பேசவில்லை. தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x