Published : 17 Aug 2016 09:04 AM
Last Updated : 17 Aug 2016 09:04 AM

தவறான தொடர்பை கைவிடாததால் இரும்புக் கடை உரிமையாளரை கொலை செய்த மனைவி கைது: போலீஸில் வாக்குமூலம்

சென்னை மண்ணடி பகுதியில் இரும்புக் கடை வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். வேறொரு பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால், மனைவியே அவரை கொன்றது தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (49). அதே பகுதியில் இரும்புக் கடை நடத்திவந்தார். இவரது மனைவி பாத்தாமுத்து (35). இவர்களுக்கு திருமண வயதில் ஒரு மகள், பள்ளியில் படிக்கும் மகன் உள்ளனர். அடுக்குமாடி குடி யிருப்பின் 3-வது தளத்தில் அக்பர் குடும்பத்துடன் வசித்தார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம்.

நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்த அக்பர், இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றார். அக்பர் ஒரு அறையிலும், மனைவி, குழந்தை கள் வேறொரு அறையிலும் தூங்கினர்.

நேற்று காலையில் சையது என்ற உறவினர், அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்தாமுத்து எழுந்து வந்து கதவைத் திறந்தார். அக்பரை பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்ற சையது, ரத்த வெள்ளத்தில் அவர் இறந்துகிடப்பதைப் பார்த்து அலறினார். சத்தம் கேட்டு பாத்தாமுத்து, குழந்தைகளும் ஓடிவந்தனர். அக்பரின் வாயில் துணி திணிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

தகவல் அறிந்து வந்த போலீஸார் அக்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை பற்றி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்று பாத்தாமுத்து கூறினார். கொள்ளை முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத் திலும் விசாரணை நடந்தது. அதேநேரம், பூட்டிய வீட்டுக்குள் அக்பர் இறந்து கிடந்ததால் குடும்பத்தினர் மீதும் போலீஸுக்கு சந்தேகம் இருந்தது.

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அக்பரின் மனைவி பாத்தாமுத்துவை பார்த்து மோப்ப நாய் தொடர்ந்து குரைத்தது. பின்னர் தெரு முனை வரை சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டது. இதனால், அவர் மீதான சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து, அவ ரிடமும் பிள்ளைகளிடமும் போலீ ஸார் தனித்தனியே விசாரணை நடத்தினர். இதில், பாத்திமுத்துவே கணவனை கொலை செய்தது தெரிந்தது.

போலீஸிடம் பாத்தாமுத்து அளித்த வாக்குமூலத்தில் கூறிய தாவது:

ரஹேனா என்ற பெண்ணுடன் அக்பர் தவறான தொடர்பு வைத்திருப்பது எனக்குத் தெரிய வந்தது. அந்த தொடர்பை கைவிடுமாறு பலமுறை கூறினேன். அவர்கள் இருவரும் ஒருமுறை தனிமையில் இருப்பதை பார்த்து, கணவரை அடித்தேன். அதன் பின்னரும் அவர் திருந்தவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவும் அதேபோல தகராறு ஏற்பட்டது. ‘என் விஷயத்தில் தலையிட்டால் உன்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நள்ளிரவில் அவர் நன்கு தூங்கிய பிறகு, சமையலுக்காக வாங்கிய புதிய கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

இவ்வாறு பாத்தாமுத்து கூறிய தாக போலீஸார் தெரிவித்தனர்.

அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலையில் பாத்தாமுத்து மட்டும்தான் ஈடுபட் டாரா, வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா என்று தீவிர விசாரணை நடந்துவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x