Last Updated : 24 Jun, 2016 07:57 AM

 

Published : 24 Jun 2016 07:57 AM
Last Updated : 24 Jun 2016 07:57 AM

தமிழக காங்கிரஸில் மாற்றமா? - சோனியா காந்தியை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பிய இளங்கோவன்

தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளிப்பதற்காக டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தோல்விக்கு இளங்கோவன் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.

தோல்வி அடைந்த வேட்பாளர் கள் பலரும் டெல்லி சென்று மாநிலத் தலைவர் என்ற முறையில் இளங்கோவன் தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மாநிலத் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், தனது தோல்விக்கு இளங் கோவனே காரணம். எனவே, மேலிடம் நீக்கும் வரை காத்திருக் காமல் மாநிலத் தலைவர் பதவியி லிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் இளங் கோவன்.

தோல்வி அடைந்த வேட்பாளர் கள் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தனது ஆதரவாளர்கள் 5 பேர் உட்பட 7 மாவட்டத் தலைவர்களை பொறுப்பிலிருந்து இளங்கோவன் நீக்கினார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி என பலரும் இளங்கோவனை மாற்ற வேண்டும் என மேலிடத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற இளங்கோவன், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித் தார். பணபலத்தை எதிர்த்து காங் கிரஸால் போட்டி போட முடிய வில்லை என தெரிவித்துள்ளார்.

அதனை ஏற்காத ராகுல் காந்தி, திமுக கூட்டணியில் மேலும் அதிக இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். சரியான வேட்பாளர் களை நிறுத்தி 30 இடங்களி லாவது வெற்றி பெற்றிருக்கலாம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படு கிறது.

ராகுல் காந்தியை தொடர்ந்து சோனியா காந்தியை சந்திப்பதற் காக 3 நாட்கள் இளங்கோவன் டெல்லியில் காத்திருந்தார். ஆனா லும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய அவர், 3 நாட்களுக்குப் பிறகு நேற்று சத்தியமூர்த்தி பவன் வருகை தந்தார்.

வெளிநாடு பயணம் முடித்து திரும்பிய பிறகு மற்ற விவரங்களை பேசிக்கொள்ளலாம் என ராகுல் காந்தி கூறியிருப்பதாக காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி டெல்லி திரும்பிய பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாக ப.சிதம்பரம், கே.வீ.தங்கபாலு ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x