Last Updated : 16 Dec, 2013 09:46 PM

 

Published : 16 Dec 2013 09:46 PM
Last Updated : 16 Dec 2013 09:46 PM

நெல்லை: பஸ் நிலைய கழிப்பிடங்களில் அவலம் கூடுதல் கட்டணம் வசூல்

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில், மாநகராட்சி கட்டணக் கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டணக் கழிப்பிடம்

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், மதுரை, திருச்சி, சென்னை, தூத்துக்குடி, ராஜபாளையம், பெங்களூர், கன்னியாகுமரி ஆகிய வெளியூர்களுக்கும், தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட இம்மாவட்டப் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தினமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து, அங்குள்ள வாகனக் காப்பகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள். 24 மணி நேரமும் பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக, 5 கட்டணக் கழிப்பிடங்கள் ஒவ்வொரு திசைக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுகாதாரம் மிகப்பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

கூடுதல் கட்டணம்

கழிப்பிடங்களைப் பராமரிக்க மாநகராட்சியிடம் இருந்து, உரிமம் பெற்றுள்ளவர்கள் தங்கள் விருப்பம்போல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பெரும்பாலும் மாநகராட்சி, நகராட்சி கட்டணக் கழிப்பிடங்களில் ரூ.1 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிப்பிடத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்திருப்போர் விதிமுறைகளுக்கு மாறாக ரூ.3, ரூ.5 எனக் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அவசர, அவசரமாக வரும் பயணிகளிடம் கட்டணத்தை முழுமையாக வசூலிக்கும் நோக்கில் வசூலிப்பாளர்கள் கெடுபிடி காண்பிக்கின்றனர்.

கட்டணத்துக்கான ரசீது வழங்கும் இயந்திரங்களையும் காட்சிக்கு வைத்துள்ளனர். அதில் இருந்து யாருக்கும் ரசீது வழங்குவதில்லை. ரசீது வழங்கினால் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்துவிடும் என்பதால் ரசீது கேட்டாலும் தருவதில்லை. கட்டணக் கொள்ளை குறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது எனத் தெரியாமல் பயணிகள் திணறுகிறார்கள். கூடுதல் கட்டண வசூலால், பகல் நேரங்களிலும் பஸ் நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடங்களையும், மரத்தடி பகுதிகளையும் திறந்தவெளிக் கழிப்பிடமாக பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால், பஸ் நிலையம் முழுவதும் எப்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது. திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பஸ் நிலையத்தை திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயணிகள் மாற்றி வருகிறார்கள்.

தடுக்க வேண்டுகோள்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அளவுக்கு கழிப்பிடங்களை, சுகாதாரத்துடன் பராமரிப்பதில்லை. பயணிகளை பரிதவிப்புக்கு ஆளாக்கும் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், பஸ் நிலையத்தில் சுகாதாரத்தைப் பேணவும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும். பஸ் நிலையத்தில், பஸ்கள் நிறுத்துமிடம், பயணிகள் கூடம் மற்றும் கூடுதலாகக் கழிப்பறை கட்டிடம் கட்ட 2013-14-ம் ஆண்டுக்கான மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x