Published : 19 Apr 2017 07:57 AM
Last Updated : 19 Apr 2017 07:57 AM
குடிமராமத்து நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் அனைத்துக் கட்சி தலைவர்கள் நேற்று மனு அளித்தனர்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்தனர்.
சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவுத் தலை வர் பவன்குமார், தமாகா துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச் செயலாளர் விடியல் சேகர், மனித நேய மக்கள் கட்சி தலைவர் அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சந்திப்பு முடிந்ததும் செய்தி யாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
நதிநீர் ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக் குழு அமைக்க வேண்டும், இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் வகையில் தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித் தர வேண்டும் என ஆளுநரிடம் நேரில் மனு அளித்தோம். குடிமராமத்து திட்டத்துக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT