Published : 07 Jan 2014 09:45 AM
Last Updated : 07 Jan 2014 09:45 AM

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க 8 சிறப்பு குழுக்கள்

தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் வெளியூருக்கு தினந்தோறும் 750க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுவே, ஆயுதபூஜை, தீபாவளி,

பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதால், இதைக் கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள், அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, ரயில்களில் முன்பதிவு டிக்கெட் விரைவில் தீர்ந்து விடுவதால் லட்சக்கணக்கான மக்கள் அரசு சிறப்பு பஸ் மற்றும் ஆம்னி பஸ்களை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சிலர் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சாதாரண, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல், பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ளிட்டவை குறித்து ஆராய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறி யதாவது:

கடந்த சில ஆண்டுகளாக அரசு அதிகமாக சிறப்பு பஸ்களை இயக்குவதால், ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும் அதிக கட்டணம் வசூல், அதிக எடை ஏற்றி செல்லுதல், பாதுகாப்பு விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க மொத்தம் 8 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில், 20 வட்டார போக்கு வரத்து அலுவலர்கள், 73 வாகன ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுக்கள் வரும் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் ஆய்வு நடத்தும். மாலை 6 முதல் நள்ளிரவு 12 மணி வரையில் 5 குழுக்களும், அதிகாலை 5 முதல் 8 மணி வரையில் 3 சிறப்பு குழுக்களும் ஆய்வு நடத்தும். சென்னையில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈ.சி.ஆர், ஒ.எம்.ஆர் ஆகிய இடங்களில் இருக்கும் சுங்கச் சாவடிகள் அருகே சிறப்பு குழுக்கள் ஆய்வு நடத்தும். போக்குவரத்து நெரிசலை குறைக்கவே, புறநகர் பகுதியில் ஆய்வு பணிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ்களின் உரிமம் சஸ்பெண்ட் அல்லது ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x