Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM
சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் விவகாரத்தால், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை வாழ்த்தி, திமுக தலைவர் கருணாநிதி படத்துடன் திமுக தலைமை அலுவலகத்தைச் சுற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் படத்துடன் மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், தேமுதிகவுடனான கூட்டணி குறித்து அழகிரி தெரிவித்த கருத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரி ஆதரவாளர்களுக்கு இடையேயான மோதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் திமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனைத் தொடர்ந்து அழகிரி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
வரும் 30ம் தேதி மதுரையில் தனது பிறந்தநாளின் போது, ஆதரவாளர்களைச் சந்தித்து அதன்படி அடுத்த கட்ட முடிவு எடுப்பதாக அழகிரி தெரிவித்துள்ளார்.
தற்போது மதுரையைத் தொடர்ந்து சென்னையிலும், அழகிரியை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தைச் சுற்றிலும் அழகிரியை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’கழகத்தின் உதிரமே’என அழகிரியை அதில் வாழ்த்தியுள்ளனர்.
அழகிரி, அவரது மனைவி காந்தி மற்றும் மகன் துரை அழகிரியின் புகைப்படங்களுடன் திமுக தலைவர் கருணாநிதியின் படமும், அழகிரியின் தீவிர ஆதரவாளரான மன்னனின் புகைப்படமும் சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ளது. மதுரை துரைராஜ் நகரைச் சேர்ந்த துரைராஜ் என்ற அழகிரியின் ஆதரவாளர் இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT