Published : 24 Sep 2013 09:53 PM
Last Updated : 24 Sep 2013 09:53 PM

இலங்கை தேர்தல் முடிவே இந்தியாவின் வெற்றி: நாராயணசாமி

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழர்களின் வெற்றி, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி கருத்து தெரிவித்தார்.

கோவையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “இலங்கையில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில், 13-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், வடக்கு, வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியது.

அதன் விளைவாகவே, தற்போதைய தேர்தல் நடந்து முடிந்து தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இனி கண்டிப்பாக அச் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நிறைவேற்றியே தீர வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை அங்கு வெற்றி பெற்றுள்ள கட்சிகள் மேற்கொள்ளும். இதனால் தமிழர்களுக்கு புனர் வாழ்வு கிடைக்க வழி ஏற்படும்” என்றார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கேட்டபோது, “ராமநாதபுரம், கோடியக்கரை, நாகை, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் இலங்கை அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதை வரவேற்கிறேன். இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, இந்திய வெளியுறவுச் செயலர் கடிதம் எழுதினார். அதில், மீனவர் அமைப்புகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. அதற்கு தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை. இரண்டாவது முறையும் கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்தே, பிரதமருக்கு இப் பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய அரசும், இலங்கை அரசும், தமிழக அரசும் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச இசைவு தெரிவித்துள்ளன.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 34 மீனவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். திரிகோணமலையில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வாரா எனக் கேட்டதற்கு, “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழக முதல்வர், தி.மு.க.தலைவர் கருணாநிதி, வாசன், ஞானதேசிகன், நான் உள்பட அனைவரும் வலியுறுத்தியுள்ளோம். நிதியமைச்சர் சிதம்பரமும் கூறியிருக்கிறார் என நினைக்கிறேன். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரதமர் தகுந்த நேரத்தில் நல்ல முடிவு எடுப்பார்” என்றார் நாராயணசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x