Published : 22 Feb 2017 09:19 AM
Last Updated : 22 Feb 2017 09:19 AM

விலையில்லா அரிசி திட்டம் தொடரும்: அமைச்சர் அறிவிப்பு

விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என உணவு, நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம் தொடரும். இத்திட்டத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கூடுதல் பயன்களுடன் உணவுப் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்படும்.

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க அரசு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x