Published : 01 Mar 2017 12:10 PM
Last Updated : 01 Mar 2017 12:10 PM

முதல்வர், அமைச்சருடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு

முதல்வர் பழனிசாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட காடு, நெடுவாசல், வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி ஆகிய இடங்களில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நிலத்தடியில் எரிபொருள் இருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நெடுவாசல் உட்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்.15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

எரிவாயு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், அதிலிருந்து வெளியேறும் நச்சு பொருட்களால் காற்று, நிலம் மாசுபடும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் நெடுவாசலில் பிப்.16-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. திட்டத்தைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேணு தலைமையில் நெடுவாசல் போராட்டக் குழுவினர் 10 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுவாசல் போராட்டக் குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்தினர்.

முன்னதாக, இன்று காலை சென்னை க்ரீம் வேஸ் சாலையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரையும் சந்தித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x