Last Updated : 08 Sep, 2018 09:24 AM

 

Published : 08 Sep 2018 09:24 AM
Last Updated : 08 Sep 2018 09:24 AM

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கிருஷ்ணா கால்வாய் தூர்வாரும் பணி மும்முரம்

சென்னை குடிநீர் தேவைக்காக தமிழக - ஆந்திர மாநில அரசுகளுக்கிடையே தெலுங்கு - கங்கை ஒப்பந்தம் கடந்த 1983-ம் ஆண்டு போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி. என இரு தவணையாக 12 டிஎம்சி. கிருஷ்ணா நதி நீரை தமிழகத்துக்கு, ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

கிருஷ்ணா நதி நீரை, ஆந்திர மாநிலம் - கண்டலேறு அணையிலிருந்து, திருவள்ளூர் மாவட்டம் - பூண்டி ஏரிக்கு கொண்டுவர 177 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டு கடந்த 1996-ம் ஆண்டு முதல் கிருஷ்ணா நதி நீர், தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைவு காரணமாக, கிருஷ்ணா கால்வாயில் இரண்டாம் தவணையாக நீர் திறந்து விடப்படவில்லை.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலமும் நெருங்குவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகப் பகுதிகளில் வரும் கிருஷ்ணா நீர் கால்வாயை தூர்வாருதல் மற்றும் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கன மழை காரணமாக தமிழகப் பகுதிகளில் பெருமளவில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயில் 32 இடங்களில் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் மற்றும் கான்கிரீட் லைனிங் கடந்த 2015-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணா கால்வாய் தூர்வாருதல் மற்றும் பாதிப்படைந்த கரை பகுதிகளை பலப்படுத்தும் பணி கடந்த வாரம் முதல் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் முதல் பூண்டி ஏரி வரை 25 கி.மீ. தூரத்துக்கு, ரூ.24 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிற இப்பணியில், வேலகாபுரம், கரகம்பாக்கம், நம்பாக்கம், நயப்பாக்கம் உட்பட பல இடங் களில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

அதேபோல், போந்தவாக்கம், அனந்தேரி, அல்லிகுழி, மைலாப்பூர், குஞ்சலம் உள்ளிட்ட இடங்களில் கரைப் பகுதிகளை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

5-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x