Published : 01 Sep 2018 02:00 PM
Last Updated : 01 Sep 2018 02:00 PM

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்; ஆண் நண்பருடன் மாயம்: தந்தை கதறல்

குன்றத்தூரில் வேறொரு நபருடன் ஏற்பட்ட தவறான தொடர்பு காரணமாக தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தனது ஆண் நண்பருடன் மாயமான தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய் (34). இவரது மனைவி அபிராமி (28). இவர்களுக்கு அஜய் (5), காருண்யா (4) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜய் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஆரம்பத்தில் சந்தோஷமாக இல்லற வாழ்க்கை சென்றுள்ளது. அழகான இரண்டு குழந்தைகளுடன் சென்ற இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் அபிராமியின் சில செயல்பாடுகள் விஜய்க்குப் பிடிக்காததால் இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது.

இதனிடையே அபிராமிக்கும் அதே பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து கணவர் விஜய்யிடம் கூறியுள்ளனர். கணவர் விஜய் இதுகுறித்து மனைவியிடம் கண்டித்து சத்தம் போட்டுள்ளார்.

இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரியாணி கடையில் வேலை செய்யும்  இளைஞருடன் வாழ அபிராமி விரும்பியதாகக் கூறப்படுகிறது. தான் சென்றுவிட்டால் தனது இரண்டு குழந்தைகளும் என்ன ஆவது என்று யோசித்த அபிராமியின் குரூர புத்தியில் விபரீத எண்ணம் தோன்றியுள்ளது.

குழந்தைகளைக் கொன்றுவிட்டு ஆண் நண்பருடன் தப்பித்துச் சென்று விடலாம் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக தக்க நேரத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்துள்ளார். நேற்று மாதக் கடைசி என்பதால் வங்கியில் வேலை அதிகம் இருக்கும் அதிகாலையில்தான் வருவேன் என்று விஜய் அபிராமியிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் வேலை முடிந்து அதிகாலையில் வீடு திரும்பிய விஜய்க்கு வீட்டின் முன்வாசல் கதவு திறந்திருப்பதையும், விளக்குகள் எரிந்துகொண்டிருப்பதையும் பார்த்து சந்தேகமடைந்து தன்னிடம் உள்ள மாற்றுச்சாவியால் கதவைத்திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது இரண்டு குழந்தைகளும் வாயில் நுரைதள்ளியபடி கட்டிலில் பிணமாகக் கிடந்தனர். குழந்தைகளின் உயிரற்ற உடலைப் பார்த்து கதறியவர், மனைவி அபிராமியைத் தேடியுள்ளார். அவரைக் காணவில்லை. உடனடியாக விஜய் குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இரு குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் அபிராமி தனது ஆண் நண்பருடன் செல்வதற்காக திட்டமிட்டுப் புறப்பட்டுள்ளார், அதற்குத் தடையாக இருந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

பக்கத்தில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் இளைஞரைத் தேடியபோது அவரையும் காணவில்லை. இருவரது செல்போனுக்கும் போலீஸார் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்ய போலீஸார் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் ஈஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். குழந்தைகளை கொன்ற தாய் தனது ஆண் நண்பருடன் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x