Published : 08 Sep 2014 10:00 AM
Last Updated : 08 Sep 2014 10:00 AM

கரும்பு அறுவடை இயந்திரம் வாங்க மானியம்: விருப்பமுள்ள விவசாயிகள் பட்டியல் தயாரிப்பு

விவசாயிகள் கரும்பு அறுவடை இயந்திரம் வாங்க தமிழக அரசு சார்பில் முதல்முறையாக மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்காக அரசின் சர்க்கரை துறை சார்பில் கரும்பு அறுவடை இயந்திரம் வாங்க விரும்பும் விவசாயிகளின் பட்டியலை தயாரித்து வருகிறது.

கரும்பு உற்பத்தியில் தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 2.5 கோடி டன் கரும்பு பயிரிடப்படுகிறது. இந்திய ஒட்டுமொத்த கரும்பு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 25 ஆயிரம் கரும்பு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் பல தொடங்கப்பட்ட நிலையில், விவசாயத்துக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. கரும்பு வெட்டுவதற்காக பிரத்தியேக தொழிலாளர்கள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவி வருகிறது. இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது.

இதனால் கரும்பு அறுவடை இயந்திரம் ஒன்றை கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கி, விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகளே நேரடியாக கரும்பு அறுவடை இயந்திரம் வாங்க மத்திய அரசு மூலமாக தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் மானியம் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சர்க்கரை துறையின் அறிவுறுத்தல்படி கூட்டுறவு கரும்பு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், கரும்பு விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்து வருகிறது.

இது குறித்து சர்க்கரைத்துறை இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண்பொறியியல் துறை சார்பில், கரும்பு அறுவடை இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாகவும், அறுவடை இயந்திரம் வாங்க ஆர்வம் உள்ள கரும்பு விவசாயிகளின் பட்டியலை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் 2 தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளிடம் விளக்கிகூறி, விருப்பம் உள்ள விவசாயிகளின் பட்டியலை தயாரித்துக்கொண்டிருக்கிறோம்.

மானியத்தொகை எவ்வளவு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலர் முரளி மோகன் கூறும்போது, ‘இம்மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கட்டுமான பணிக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். விவசாயம் செய்வதற்கு முன்வருவதில்லை. இந்நிலையில் கரும்பு அறுவடை இயந்திரம் வாங்க முதல் முறையாக அரசு மானியம் வழங்க இருப்பது எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அது எங்களின் பல ஆண்டு கோரிக்கை. இதன் மூலம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் உயரும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x