Last Updated : 10 Sep, 2018 02:31 PM

 

Published : 10 Sep 2018 02:31 PM
Last Updated : 10 Sep 2018 02:31 PM

கணவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள முடிவு: சேலத்தில் பெண் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் புவனேஸ்வரி, தனது கணவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் ஜங்ஷனை அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுதமன் என்பவருக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணமானது.

கவுதமன் எந்தவொரு வேலையும் இல்லாமல் தன்னை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டிய புவனேஸ்வரி, திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே கணவர் கவுதமனுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன்பிறகு பிரிந்து வந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்தார். இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், தன் கணவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்வதாக வந்த தகவலையடுத்து, புவனேஸ்வரி கணவர் வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது, புவனேஸ்வரியின் மாமியார் அவரைத் திட்டி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த புவனேஸ்வரி இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். புவனேஸ்வரியின் தற்கொலைக்குக் காரணமான கணவர் கவுதமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புவனேஸ்வரியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x