Published : 17 Sep 2018 10:03 AM
Last Updated : 17 Sep 2018 10:03 AM
தமிழக-இலங்கை மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக முதல்வரை, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் அடுத்த வாரம் சென்னையில் சந்தித்துப் பேச உள்ளதாக கண்டியில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த தினக் கொண்டாட்டம் அவர் பிறந்த இலங்கையில் உள்ள கண்டியில் நேற்று நடைபெற்றது. கண்டியில் உள்ள பொற்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு இலங்கை கல்வி அமைச்சர் வேலுச்சாமி ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது அமைச் சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் புத்தகங்கள் இலங்கை அரசின் ஒப்புதலுடன் வழங்க உள்ளோம்.
தமிழக-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் நேரில் பேசினேன். இப்பிரச்சினை தொடர்பாக அவர் அடுத்த வாரம் சென்னை வந்து முதல்வர், மீன்வளத் துறை அமைச் சர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்றார்.
பின்னர் இலங்கை கல்வி அமைச்சர் வேலுச்சாமி ராதா கிருஷ்ணன் கூறியதாவது: இந்திய-இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை 2 மாதங்களில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT