Published : 15 Sep 2018 11:08 AM
Last Updated : 15 Sep 2018 11:08 AM

காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞர்

ஆரணி அருகே காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள தேவனாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது 17 வயது மகள், அருகிலுள்ள ரேணுகொண்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் சக மாணவிகளுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, படவேடு மங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி (21) என்ற இளைஞர், மாணவியை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து பசுபதியைப் பிடித்து அடித்து பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், வலியால் அலறித் துடித்த மாணவி ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பசுபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பசுபதி அந்த மாணவியை சில காலமாகப் பின் தொடர்ந்து, தான் காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்ததாகவும், அதனை அவர் ஏற்காமல் போகவே ஆத்திரமடைந்து பசுபதி மாணவியைக் கத்தியால் குத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x