Published : 12 Sep 2014 11:54 AM
Last Updated : 12 Sep 2014 11:54 AM

உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் இன்று மனு: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி இன்று (வெள்ளிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. திமுக உட்பட தமிழகத்தின் பிரதான கட்சிகள் யாவும் இந்த தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பாஜக மட்டும் களத்தில் உள்ளது. எனினும் நெல்லை மாநகராட்சி பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் உட்பட ஏராளமான பாஜக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் மனு தாக்கல் முறையாக நடக்கவில்லை என்றும் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் சென்னையில் வியாழக்கிழமை கூறுகையில், “தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் அவர்களது மனுவை வாபஸ் வாங்கச் செய்துள்ளனர். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தபோது, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மாறாக அவர்கள் புகார் அளித்தவர்கள் மீதே குற்றம்சாட்டினர். இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x