Published : 15 Jun 2019 11:45 AM
Last Updated : 15 Jun 2019 11:45 AM

வியாசர்பாடியில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே ரவுடி வல்லரசு காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (20). இவர் மீது வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 6 வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் வியாசர்பாடி எம்.எம்.கார்டன் பகுதியில் வல்லரசு மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் வியாசர்பாடி காவல் நிலையத் தலைமைக் காவலர் பவுன்ராஜ், சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களைக் கைது செய்ய முயன்றதாகவும், அப்போது வல்லரசு அவரது கூட்டாளிகள் காவலர் பவுன்ராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த காவலர் பவுன்ராஜ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் வல்லரசு மற்றும் அவரது கூட்டாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் புரசைவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த வல்லரசுவின் கூட்டாளிகள் கார்த்திக், கதிரவன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வல்லரசு மாதவரம் சிஎம்டிஏ டிரங் சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் பதுங்கியிரு ப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி எம்கேபி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மில்லர், ரவி, உதவி ஆய்வாளர் பிரேம்குமார், தீபன் ஆகியோர் மாதவரத்தில் பதுங்கியிருந்த ரவுடி வல்லரசை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு பிடிக்கச் சென்றனர்.

அப்போது போலீஸார் வருவதை அறிந்த வல்லரசு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் ரவுடி வல்லரசுவை போலீஸார் சுற்றி வளைத்த போது,வல்லரசு தான் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் பிரேம், தீபன் ஆகியோரை வெட்டியதில் அவர்கள் காயமடைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த  ஆய்வாளர் மில்லர் துப்பாக்கியால் வல்லரசை நோக்கி சுட்டதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். வல்லரசுவின் சடலத்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த உதவி ஆய்வாளர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x