Published : 24 Jun 2019 08:14 AM
Last Updated : 24 Jun 2019 08:14 AM
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சி வளர்ச்சி நிதி ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்ட முடிவில் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சி வளர்ச்சி நிதி ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் தேர்வான பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் பழி வாங்கப்பட்டு வருகின்றனர். இதை கைவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இயக்குநரகம் முன்பாக ஜூலை முதல் வாரம் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT