Published : 07 Jun 2019 12:51 PM
Last Updated : 07 Jun 2019 12:51 PM

மதுரையில் எய்ம்ஸ் அமைவது எப்போது?- நிலத்தை ஒப்படைக்காத தமிழக அரசு; ஆர்டிஐ மனுவில் அம்பலமான உண்மை

மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுவதற்கான நிலத்தை மத்திய அரசிடம் இதுவரை  தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என்ற உண்மை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த பதில் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமையும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்த வி.எஸ்.மணி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் மதுரையில் அமையப்போகும் ‘எய்ம்ஸ்’ மருத்துவனை விவரங்களை அறிய 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் பதில் அளித்துள்ளது.

கேள்விகளும் பதில்களும்:

1.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு எவ்வளவு தொகை ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?

ரூ.1,264 கோடி

2. காம்பவுண்ட் சுவர் அமைக்கவும், மண் பரிசோதனை செய்யவும் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது?

ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஏதாவது கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா?  

இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பூர்வாங்க பணிகள் மட்டுமேதொடங்கப்பட்டுள்ளது.

4. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபடம் முடிவாகி இருந்தால் வழங்கமுடியுமா?

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிட வரைப்படம் இன்னும் முடிவாகவில்லை

5. தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைத்துள்ளதா? ஒதுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நிலம் என சொல்ல முடியுமா? 

தற்போது வரை எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்ட நிலம் எதையும் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை பதிலளித்துள்ளது.

இதன் மூலம் மதுரை எய்ம்ஸ் நிலவரம் அம்பலமாகியுள்ளது.

மதுரை எய்மஸ் பின்னணி..

கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தமிழகத்தில் 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் 2018-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மதுரை தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.

2019 ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி நேரடியாக மதுரை வந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை விரைவாக தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தைக்கூட தமிழக அரசு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x