Last Updated : 13 Jun, 2019 12:00 AM

 

Published : 13 Jun 2019 12:00 AM
Last Updated : 13 Jun 2019 12:00 AM

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்;  42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.833 கோடி விநியோகம்: தமிழகத்தில் 2 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும், ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை சுமார் 42 லட்சம் விவசாயிகளுக்கு 2 தவணைகளாக ரூ.883 கோடி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கும், ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், அதேநாளில் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமியும் தொடங்கி வைத்தனர். முதலில் குறு, சிறு விவசாயிகளுக்கு மட்டுமாக தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் (ஓரளவு நடுத்தர, நடுத்தர, பெரிய விவசாயிகள்) விரிவுபடுத்தப்பட்டது.

உயர் வருவாய் பெறும் விவசாயிகள், கோயில் நிலம் வைத்திருப்போர், விவசாய குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மேயர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், துறைகள், அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றோர், உள்ளாட்சித் துறையில் பணியாற்றுவோர் அல்லது ஓய்வு பெற்றோர், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர், வருமான வரி செலுத்துவோர், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், கணக்கு தணிக்கையாளர், பதிவு பெற்ற கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகியோர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது. விவசாயி இறந்துவிட்டால், அவரது வாரிசுதாரருக்கு பட்டா மாற்றப்பட்ட பிறகு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் குறு மற்றும் சிறு விவசாயிகள் 73 லட்சத்து 43 ஆயிரம், ஓரளவு நடுத்தர விவசாயிகள் 4 லட்சத்து 52 ஆயிரம், நடுத்தர விவசாயிகள் 1 லட்சத்து 27 ஆயிரம், பெரிய விவசாயிகள் 14 ஆயிரம் என மொத்தம் 79 லட்சத்து 36 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பணம் பெறத் தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் 63 லட்சத்து 36 ஆயிரம்பேர் பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி’ இணையதளத்தில் 28 லட்சம் பேர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 24 லட்சத்து 54 ஆயிரம் விவசாயிகள் அளித்த தகவல்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களில் ஆதார் வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களான 22 லட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளுக்கு முதல் தவணையாக சுமார் ரூ.420 கோடி வழங்கப்பட்டது.

இரண்டாம் தவணை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் 20 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.413 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, இரண்டு தவணையாக 42 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.833 கோடி செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x