Last Updated : 24 Jun, 2019 02:13 PM

 

Published : 24 Jun 2019 02:13 PM
Last Updated : 24 Jun 2019 02:13 PM

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காகச் சென்ற பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காகச் சென்ற பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நடந்த்துள்ளது.

மதுரை மாவட்டம் மருதங்குடியைச் சேர்ந்தவர் புனிதசெல்வி (21). இவருடைய கணவர் ஆசைத்தம்பி. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், புனிதசெல்வி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து ஆசைத்தம்பி - புனிதசெல்வி தம்பதியினர் காரியாப்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு புனிதசெல்வியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கரு 60 நாள் வளர்ச்சியில் இருப்பதால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகொண்டு அப்படியே குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையும் செய்துகொள்ளுமாறு பரிந்துரைத்து கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து தனது கர்ப்பத்தை கலைப்பதற்காக புனிதசெல்வி கடந்த 12-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு கருக்கலைப்புக்கான மாத்திரை கொடுத்துவிட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

உள்நோயாளியாக தங்கியிருந்த அவருக்கு தொடர்ந்து கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்கேன் பரிசோதனையில் அப்பெண்ணின் கருக்கலையாமல் இருப்பது தெரியவந்துள்ளது. 

மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்யலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கு பயந்துபோன புனிதசெல்வி கழிவறை சென்றுவருவதாகக் கூறிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்பெண்ணின் கணவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வரும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.  மருத்துவமனைக்கு வர மறுத்த அப்பெண், அரசு மருத்துவனைக்கு வர முடியாது, தனியார் மருத்துவமனைக்கு சென்று கருவை கலைத்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் புனிதசெல்வியை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக புனிதசெல்வி - ஆசைத்தம்பி தம்பதியினர் மாவட்ட நிர்வாகத்திலும், போலீஸிலும் புகார் அளித்துள்ளனர்.

புனிதசெல்வியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக புனிதசெல்வியின் கணவர் ஆசைத்தம்பியும், புனிதசெல்வியின் சகோதரர் வேல்பாண்டியும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x