Published : 12 Jun 2019 01:52 PM
Last Updated : 12 Jun 2019 01:52 PM
மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இயக்குனர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர் பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் ஜூன் 5-ல் நடைபெற்றது.
இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், மாமன்னன் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவரது ஆட்சி காலம் இருண்ட காலம். டெல்டா பகுதியில் சாதிய கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது என குறிப்பிட்டார். ரஞ்சித்தின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் ரஞ்சித் மீது கலகம் உண்டாக்குதல், ஜாதி மோதலை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ராஜராஜ சோழன் தொடர்பான வரலாற்று உண்மைகளை தான் பேசினேன். பல்வேறு புத்தகங்களில் உள்ள தகவல்களை தெரிவித்தேன். நிலப்பறிப்புக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினேன்.
என்னைப்போலவே பலரும் பேசினர். ஆனால் என் பேச்சு மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது.
உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. என் பேச்சால் மக்களிடையே பிரச்சினை ஏற்படுத்தவில்லை. இதனால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை(வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT