Published : 11 Sep 2014 11:12 AM
Last Updated : 11 Sep 2014 11:12 AM
சென்னை கோயம்பேட்டில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பாடகியாக இருப்பவர் செல்வி(பெயர் மாற்றப் பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரும், செல்வி யும் காதலித்து வருகின்றனராம். செவ்வாய்கிழமை இரவு, பணி முடிந்து அயனாவரத்தில் உள்ள வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார் செல்வி. அப்போது அருகே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்வியை தொடர்ந்து கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து காதலன் அருணுக்கு செல்போன் மூலம் தகவல் கூறினார் செல்வி. அடுத்த சில நிமிடங்களில் ஒரு காரில் நண்பர்கள் 4 பேருடன் செல்வி வந்த பேருந்தை கண்டுபிடித்து அதை பின் தொடர்ந்து வந்தார் அருண். ஐ.சி.எப். அருகே வந்தபோது பேருந்தை வழிமறித்தவர்கள், அந்த இளைஞரிடம் நைசாக பேசி கீழே இறக்கினர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.
இந்த சம்பவத்தை அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கார் எண்ணை குறித்து வைத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கடத்தல் கார் எண் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோயம்பேட்டில் ஒரு தியேட்டர் அருகே அந்த கார் நின்றுகொண்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். உடனே அந்த காரை சுற்றிவளைத்து அதன் அருகே நின்று கொண்டிருந்த அருண் மற்றும் அவரது நண்பர்கள் முத்துராஜ், ராஜா, ராபர்ட், வினோத் ஆகியோரை பிடித்தனர். இதில் முத்துராஜ் அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.
கடத்தப்பட்ட இளைஞர் குறித்த விவரங்களை போலீஸார் கேட்டபோது, அவரை நன்றாக அடித்து விட்டு, மதுரவாயல் அருகே ஒரு இடத்தில் இறக்கிவிட்ட தாக கூறினர். அந்த இடத்திற்கு போலீஸார் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. அந்த இளைஞர் குறித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. பிடிபட்ட 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT