Published : 03 Sep 2014 06:25 PM
Last Updated : 03 Sep 2014 06:25 PM

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், பாஜகவுக்கு தேமுதிக ஆதரிக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலை திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை கலந்தாலோசித்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதன்படி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை செவ்வாய்க்கிழமை அவர் சந்தித்துப் பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சி மன்றங்களின் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தலும், சில நகராட்சிகளுக்கான தலைவர் தேர்தலும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே அந்தப் பதவியில் இருப்பவர் இறந்து போனால் வருவது என்பது மாறி ஆட்சியாளர்களின் விருப்பு, வெறுப்பிற்கு ஏற்ப இடைத்தேர்தல் கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற மரபு இருந்தாலும், இன்றைய ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

மேலும் பாரதிய ஜனதாகட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் தேமுதிக-வின் ஆதரவை கோரியுள்ளனர்.

அதன் அடிப்படையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 18.09.2014 அன்று நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு முழு ஆதரவை வழங்கும் என தெரிவித்து கொள்கிறேன். கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x