Published : 06 Jun 2019 04:22 PM
Last Updated : 06 Jun 2019 04:22 PM

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் கதி என்ன? - கி.வீரமணி கேள்வி

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கதி என்ன என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வின் முடிவால் கடந்த ஆண்டைப் போலவே தமிழ்நாட்டில் இவ்வாண்டும் மாணவிகள் மூவர் தங்கள் உயிரை முடித்துக் கொண்டுள்ளனர். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மீன் வியாபாரி நம்பிராஜின் மகள் வைஷ்யா, திருப்பூர் பின்னலாடையில் பணியாற்றும் செல்வராஜ் - ராஜலட்சுமி ஆகியோரின் மகள் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேட்டைச் சேர்ந்த மோனிஷா ஆகிய 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வில் முதலிடம் வர பெற்றோர்கள் மருத்துவர்களாக இருக்கவேண்டும், ரூ.10 லட்சம் வரை செலவிடத் தயாராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நாடு முழுவதும் 7 லட்சத்து 97,031 பேர் நீட் தேர்வெழுதினார்கள். இதில் 3 லட்சத்து 51,278 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 45,761 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.  இதில் முதலிடம் பெற்ற நளின் கண்டேல்வாலின்  தந்தை, தாய் மற்றும் அண்ணன் மருத்துவர்கள், இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் அலைன் நீட் பயிற்சி வகுப்பில் படித்தேன்; அவர்கள் கொடுத்த பயிற்சியினால் இந்த இடத்தைப் பெறமுடிந்தது" என்று கூறினார், இவரது தாயார் அளித்த பேட்டியில் "நாங்கள் மருத்துவக் கல்வியின் முக்கியத்துவம் கருதி இரவு பகலாக எனது மகனின் படிப்புக்குப் பெரிதும் துணையாக இருந்தோம்" என்று கூறினார். 

இரண்டாம் இடம் பிடித்த பாவிக் பன்சாலின் தந்தை டெல்லி கல்வித்துறையின் அதிகாரியாக உள்ளார், தாயார் இயற்பியல் பேராசியர்! இவர் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஆகாஷ் நீட் தனியார் பயிற்சி வகுப்பில் ஓர் ஆண்டு பயின்று வந்தார். 

மூன்றாம் இடம் பிடித்த அக்சாத் கவுசிக் என்ற மாணவனின் பெற்றோரும் மருத்துவர்கள்தான்; இவரும் ஆகாஷ் பயிற்சி வகுப்பில் பயின்றதால்தான் மூன்றாமிடம் பிடித்தேன் என்றார்.

தமிழகத்தில் முதல் இடம் பிடித்த சுருதி என்பவரின் பெற்றோரும் பிரபல மருத்துவர்கள் தான். இவரும் தனியார் பள்ளியில் நீட் பயிற்சி பெற்றுவந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தளமான கொரா என்ற தளத்தில் ஆகாஷ் என்ற தனியார் பயிற்சி வகுப்பு - ஓராண்டு பயிற்சிக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் கட்டணமாக வாங்குகிறது என்றும், அலைன் பயிற்சி வகுப்பு ரூ.5  லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஏற்கெனவே படித்த குடும்பம் பொருளாதார வசதி மிக்கக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். மருத்துவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கு இனிமேலும் ஆதாரங்கள் தேவைப்படாது.

சமுக நீதிக்கு எதிரான மத்திய அரசு, எப்படியும் உயர்சாதியினரின் ஆதிக்கம் மீண்டும் மருத்துவத் துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் நீட் என்ற ஒன்றை சூழ்ச்சியாகத் திணிப்பதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள், சமுக நீதியாளர்கள் கிளர்ந்து எழ வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கதி என்ன? எந்தக் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டுள்ளது? அத்தகு சட்டத்தைப் பரிசீலிப்போம் என்று வாக்குறுதி கொடுத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதவி உயர்வு கிடைத்து மத்திய நிதியமைச்சராகவும் ஆகிவிட்டார்.

கண்டும் காணாத அதிமுக அரசு!

சட்டத்தை நிறைவேற்றிய அதிமுக அரசோ, மத்திய அரசுக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 72.6 விழுக்காடு; தமிழ்நாட்டிலோ 92.54 விழுக்காடு. ஆனால், நீட் தேர்விலோ அந்த மாநிலம் முதலிட மாநிலங்களில் இடம்பெற்றுவிட்டது. இந்த சமுக அநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டாமா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - வரவேற்கத்தக்கது

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தொடரில் தமிழக உறுப்பினர்கள் நீட் குறித்து ஆணித்தரமாக எழுப்பி - உரிய தீர்வு காண்பார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது - நம்பிக்கை அளிப்பதாகும்.

பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

மக்கள் மத்தியிலும் இதனை வேகமாகக் கொண்டு செல்வோம். பெற்றோர்களும் யாருக்கோ வந்த விருந்தென்று கருதி, நாம் களம் காணும்பொழுதெல்லாம் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, களத்திற்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதும் நமது முக்கிய வேண்டுகோளாகும்.

நீட் ஒழிப்புக்காக எத்தனை ஆண்டுகளானாலும் தொடரவே செய்யும்! நுழைவுத் தேர்வை 21 ஆண்டுகளுக்குப் பின் - தொடர் போராட்டத்திற்குப் பின் ஒழித்தோம் என்பது வரலாறு", என, கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x