Published : 14 Jun 2019 03:17 PM
Last Updated : 14 Jun 2019 03:17 PM
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்திருக்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தேர்தலில் தோல்வியடைந்தால், பலரும் குறை சொல்லத்தான் செய்வார்கள். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் எந்த இடத்தில் யார் போட்டியிடுவார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.
ராஜ்யசபா எம்.பி.க்கான கோரிக்கையை நாங்கள் ஏற்கெனவே முன்வைக்கவில்லை, ஆனால், பாமக முன்கூட்டியே அந்தக் கோரிக்கையை வைத்திருந்தது. ஆகையால் அதைப் பற்றி நாங்கள் தற்சமயம் எதுவும் பேசவில்லை.
போன முறை திமுக படுதோல்வியை சந்தித்தது இந்த முறை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அதனால் எந்தவித மாற்றமும் இங்கே ஏற்படப்போவதில்லை. எங்களுடைய வாக்கு வங்கி என்பது எந்தவிதத்திலும் குறையவில்லை.
மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. மற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை. தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகளிடம் தேமுதிக கோரிக்கை வைக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT