Last Updated : 06 Jun, 2019 12:00 AM

 

Published : 06 Jun 2019 12:00 AM
Last Updated : 06 Jun 2019 12:00 AM

தொடக்கப் பள்ளிகளில் கணினி வசதி இல்லாததால் ‘எமிஸ்’ இணைய பணிகளை முடிப்பதில் தலைமையாசிரியர்கள் திணறல்: ஆசிரியர் பயிற்றுநர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க கோரிக்கை

அரசு தொடக்கப் பள்ளிகளில் கணினி வசதி இல்லாததால் ‘எமிஸ்’ இணையதள பணிகளை முடிக்க முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதனால்அலுவல் பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளனர். தொடக்கக் கல்வித் துறையின்கீழ் 27,193 ஆரம்பப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 32 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பயிற்றுவிக்க 1.12 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.

இதற்கிடையே காகிதமில்லா குறையை ஊக்குவிக்கும் விதமாகவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட வசதிகளை வழங்கவும் அனைத்துவித பணிகளையும் கணினிமயமாக்க பள்ளிகல்வித் துறை திட்டமிட்டது. இதற்காக ஒருங்கிணைந்த கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது. இதில் பள்ளிகளின் அங்கீகாரம், மாணவர், ஆசிரியர்கள் விவரம், உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி பெறுபவர் எண்ணிக்கை, மாற்றுச் சான்றிதழ், இடமாறுதல் கலந்தாய்வு உட்பட கல்வித் துறையின் பெரும்பாலான செயல்பாடுகள் ‘எமிஸ்’ இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் கல்வித் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் ‘எமிஸ்’ மூலமாகவே செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அரசு தொடக்கப் பள்ளிகளில் முறையான கணினி வசதி இல்லாததால் ‘எமிஸ்’ பணிகளை முடிப்பதில் சிரமம் இருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத் துக்குள் அனுப்பாவிட்டால் விளக்கம் தர வேண்டும் என்பதால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அரசு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள 85 சதவீத அரசு தொடக்கப் பள்ளிகளில் கணினி மற்றும் இணைய வசதி இல்லை.

மீதமுள்ள பள்ளிகளில் தங்கள் சொந்த முயற்சியில் நிதியுதவி பெற்று மடிக்கணினி வசதியை ஆசிரியர்களே ஏற்படுத்திஉள்ளனர். இதர பள்ளி தலைமையாசிரியர்கள் தனியார் இணையதள மையம் மூலம் ‘எமிஸ்’ வலைதளத்தில் தகவல்களை உள்ளீடு செய்கின்றனர். அதன்படி மாணவர்களின் தினசரி வருகைப்பதிவு, கல்வி செயல்பாடுகள், சான்றிதழ் உட்பட அனைத்து தகவல்களையும் ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதில் தவறுகள் நிகழ்ந்தாலோ, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காவிட்டாலோ அதிகாரிகள் உடனே தொடர்பு கொண்டு தொந்தரவு செய்கின்றனர். சில நேரங்களில் உரிய நேரம் தராமல் அவசரப்படுத்துவதால் தினமும் ‘எமிஸ்’ வேலையை முடிப்பதே எங்களுக்கு பெரும் போராட்டமாக மாறி விட்டது.

புதிய பாடத்திட்டம்

இதன் காரணமாக மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் போதுமான கவனம் செலுத்த முடியவில்லை. இந்த ஆண்டு 2, 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை மாணவர்களுக்கு புரியும்படி எளிமையாக நடத்த கூடுதல் நேரம் தேவைப்படும். இந்தச் சூழலில் துறை சார்ந்த அனைத்து பணிகளையும் இணையதளம் வழியாகவே மேற்கொள்ள அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும்.

இந்தச் சிரமங்களைத் தவிர்க்க ‘எமிஸ்’ பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு பயிற்றுநருக்கு சராசரியாக 10 பள்ளிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாகாது. இதனால் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளிலும் சிக்கல் வராது. ஆசிரியர்களுக்கும் பணிச்சுமையோ, தேவையற்ற செலவினங்களோ ஏற்படாது. மேலும், அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் இணையதளம், பிரின்ட்டர் வசதியுடன் மடிக்கணினி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் கல்விப் பணி பெரிதும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x