Published : 06 Jun 2019 07:43 PM
Last Updated : 06 Jun 2019 07:43 PM

சட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர்: திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருவள்ளுரில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தேவராஜ் என்பவர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்துவதால், மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்பதால், சட்டவிரோத செயல்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், பூவிருந்தவல்லி வட்டாட்சியருக்கும் உத்தரவிடகோரி ஷீலா தேவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிராசாத் அமர்வு முன் விசாரணைக்கு இன்று வந்தது, திருவள்ளூரில் இரவு பகல் பாராமல் சட்டவிரோதமாக 50-க்கும் மேற்பட்ட லாரிகளில்  தண்ணீர் எடுத்து வருவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர்  உறிஞ்சப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தவும் ஆட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x