Published : 12 Jun 2019 05:59 PM
Last Updated : 12 Jun 2019 05:59 PM
இலங்கை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் கோவை இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலருடன், கோவையைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஃபேஸ்புக் மூலம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கடந்த சில வாரங்களாக அந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்தனர். அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களின் தொடர்புகளை ஆராய்ந்தனர். சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிடும் கருத்துகளையும் கண்காணித்து வந்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சிலருடன், ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்து வந்ததாக இளைஞர்கள் சிலர் சந்தேகிக்கப்பட்டனர்.
அவர்களில் உக்கடம் அன்பு நகரைச் சேர்ந்த அசாருதீன், அல் அமீன் காலனியைச் சேர்ந்த ஜாகிம்ஷா என்ற இப்ராகிம் (28), குழந்தை கவுண்டர் வீதியைச் சேர்ந்த ஷேக் இதாயத்துல்லா (37), குனியமுத்தூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், போத்தனூரைச் சேர்ந்த சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய 6 பேருக்கு சொந்தமான 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) காலை திடீர் சோதனை நடத்தினர். சோதனை நடத்தப்படும் இளைஞர்களின் பெயரை கோவை மாநகர உளவுத்துறை போலீஸாரும் உறுதிப்படுத்தினர்.
இந்த சோதனை இன்று அதிகாலை 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடந்தது. இந்த சோதனையின் போது, அவர்களின் வீடுகளில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அலுவலகத்தில் விசாரணை
அதைத் தொடர்ந்து, ஆறு பேரையும் ரேஸ் கோர்ஸில் உள்ள தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கியத் தீவிரவாதிகளுடன் ஃபேஸ்புக் மூலம் எப்படி தொடர்பு ஏற்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தொடர்பாக தகவல்களை யாருக்காவது பகிர்ந்துள்ளீர்களா, வேறு யாரையாவது இவர்களுடன் தொடர்பில் இணைக்க முயன்றீர்களா, இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது போன்றவை குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT