Last Updated : 21 Jun, 2019 12:00 AM

 

Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM

ஒப்பந்தப்புள்ளி, ஏலம், நிர்வாகத்தில் தலையீடு; ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக அழுத்தம்: சமாளிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்

ஆண்டிபட்டி தொகுதியில் ஒப்பந்தப்புள்ளி, ஏலம், நிர்வாக தலையீடுகளில் அதிமுக, அமமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளின் மும்முனை அழுத்தங்களால் நிலை மையைச் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் அதிமுக வின் கோட்டையாக இருந்த ஆண்டிபட்டி அண்மையில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு மாறியது. ஏறத்தாழ 23 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தொகுதியை திமுக தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர். ஜெயலலிதா உள்ளிட்டோர் போட்டியிட்டதால் மாநில அளவி லான ஈர்ப்பை இத்தொகுதி பெற்றி ருந்தது. இதனால் இத்தொகுதியில் அதிமுக வலுவாக வேரூன்றி இருந்தது. தேர்தல் முடிவுக்கு முன்பே வெற்றியை உறுதி செய்யும் அளவுக்கு அதிமுகவுக்கு ஆதரவு தொகுதி முழுவதும் பரவலாக இருந்தது.

அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்து களம் இறங்கியது. அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வனுக்கு இத்தொகுதியில் செல்வாக்கு இருந்ததால் அதிமுக வாக்குகள் அமமுகவுக்குப் பிரிந்தன. மேலும் திமுகவுக்கும் வாக்குகள் அதிகம் பதிவானதால் திமுக வெற்றிக்கனியைப் பறித்தது.

இந்நிலையில், இத்தொகுதியில் ஒப்பந்தப்புள்ளி, ஏலம், நிர்வாக தலையீடு போன்றவற்றில் ஆளுமை செலுத்தி வந்த அதிமுகவுக்கு தற்போது திமுகவும் அமமுகவும் பெரும் நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சில தினங்களுக்கு முன் ஆண்டிபட்டி வாரச்சந்தைக்கான ஏலம் நடைபெறுவதாக இருந்தது. வழக்கமாக அதிமுக பிரமுகர்களின் பினாமிகளே இவற்றைக் கைப்பற்றி வந்தனர். ஆனால் இம்முறை இரு கட்சிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தின. இதற்கு ஏற்ப இத்தொகுதி எங்கள் வசம் வந்துள்ளது என்று திமுக தரப்பும், ஆட்சி எங்களுடையது என்று அதிமுகவும் முனைப்புக் காட்டி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, அமமுகவும் தங்கள் பலத்தை அதிமுகவுக்கு எதிராகப் பிரயோகிக்க, உள்ளாட்சி அதிகாரிகள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறு கின்றனர்.

இதற்கிடையே, நிர்வாகக் காரணங்களுக்காக ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப் பட்டது. இந்த அறிவிப்பு மூலம் அதிகாரிகள் தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஒரு ஏலத்துக்கே இவ்வளவு பிரச்சினை ஏற்படுகிறது. இனி தொகுதி முழுவதும் அரசுத் துறைகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த மும்முனை அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது என்று அதிகாரிகள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 23 ஆண்டுகளுக்கும் மேல் அதிமுகவினரின் ஆளுமை இத்தொகுதியில் இருந்தது. இதை அவ்வளவு எளிதில் அவர்களால் விடமுடியவில்லை. திமுக தரப்பும் தங்கள் வெற்றியை பயன்படுத்திக் கொள்ள அழுத்தம் கொடுக்கிறது. அமமுக ஒருபுறம் நெருக்கடி தருகிறது. இதனால் மேல்மட்டத்தில் இருந்து பல வகையிலும் எங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x