Last Updated : 01 Jun, 2019 12:00 AM

 

Published : 01 Jun 2019 12:00 AM
Last Updated : 01 Jun 2019 12:00 AM

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராவாரா?- பாஜகவுக்கு விட்டுத்தர அதிமுக தயக்கம்

வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எஸ்.ஜெய்சங் கரை தமிழகத்தில் இருந்து மாநிலங் களவை உறுப்பினராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்ச ரவை நேற்று முன்தினம் பதவியேற்றது. பிரதமர் மோடியுடன் 57 அமைச்சர்கள் பதவியேற்றனர். மோடியின் அமைச்சரவையில் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு வெளியுறவுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்ற அவரது தேர்வை கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் பாராட்டியுள்ளனர்.

எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத ஜெய்சங்கர் அமைச்சர் பதவியில் தொடர வேண்டுமானால் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும். ஜூன், ஜூலையில் அசாமில் 2, தமிழகத்தில் 6 என காலியாகும் 8 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அசாமில் பாஜக ஒரு இடத்தில் உறுதியாக வெல்லமுடியும். ஆனாலும், ஜெய்சங்கர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் இங்கிருந்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்க பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு ஒரு இடம் தர பாஜக முன்வந்தது.

அதை தனது மகன் ரவீந்திரநாத்துக்கு பெற ஓபிஎஸ் முயற்சி மேற்கொண்டார். ஆனால், மாநிலங்களவை உறுப்பினராக உள்ளஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் தனக்குதான் அந்தப் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அவருக்கு முதல்வர் பழனிசாமியின் ஆதரவும் இருந்தது. இப்படி இருவரிடையே போட்டி ஏற்பட்டதால் மத்திய அமைச்சரவையில் அதிமுக சார்பில் யாரும் இடம்பெறவில்லை.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரிடம் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ‘அதிமுகவுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைத் தர தயாராக இருக்கிறோம். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரை தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதித்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களில் அதிமுக 3, திமுக 3 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. மக்களவைத் தேர்தலின்போது பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உடன்பாடு செய்துள்ளது. இப்போது பாஜகவுக்கு ஒன்று கொடுத்தால் அதிமுகவுக்கு ஒரு இடம்தான் கிடைக்கும். எனவே, பாஜகவுக்கு ஒரு இடம் தர அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சட்டப்பேரவையில் திமுக கூட்டணியின் பலம் 109 ஆக உள்ளது. இன்னும் 9 எம்எல்ஏக்கள் இருந்தால் திமுக ஆட்சி அமைத்துவிடும். இதுபோன்ற சிக்கலான சூழலில் அதிமுக அரசு நீடிக்க வேண்டுமானால் மத்திய அரசின் ஆதரவு தேவை. எனவேதான், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தருமாறு பாஜக வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என அதிமுக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x