Published : 05 Jun 2019 04:36 PM
Last Updated : 05 Jun 2019 04:36 PM

உலக சுற்றுச்சூழல் தினம்: பொதுமக்களுக்கு இலவசமாக 3 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை 'கீரின்' அமைப்பினர் ரம்ஜான் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள், சாலைகளில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோருக்கு ஒரே நாளில் இலவசமாக 3 ஆயிரம் நாட்டு மரக்கன்றுகளை வழங்கினர்.

சுற்றுச்சூழலுக்காக பாடுபட்டவர்களுக்கும், மரக்கன்றுகள் அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்தவர்களுக்கும் மதுரை 'கீரின்' அமைப்பினர், ஆண்டுதோறும் விழா எடுத்து பாராட்டுவதோடு அவர்களுக்கு பசுமை விருதும் வழங்குகின்றனர்.

இந்த அமைப்பினர் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த ஜூன் மாதத்தை பசுமை மாதமாக அறிவித்து பொதுமக்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன் தொடக்கமாக இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினத்தில் மதுரை காந்தி மியூசியம் முன் இந்த அமைப்பினர், சாலையில் நடந்து சென்றோர், வாகனங்களில் செல்வோரிடம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், மரங்களின் அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்து இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினர். அதுபோல், பள்ளிகள், கல்லூரி நிர்வாகங்களுக்கும் அவர்கள் வளாகங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஒரு நிறுவனத்திற்கு 50 மரக்கன்றுகள் வீதம் வழங்கினர்.

'கீரின்' அமைப்பினரின் இந்த பசுமையை அறிந்த மதுரை காவல் உதவி ஆணையர் மணிவண்ணன், கண் மருத்துவர் பத்திரி நாராயணன் போன்றோர், நேரில் சென்று இந்த அமைப்பினரைப் பாராட்டி, அவர்களும், இவர்களுடன் நின்று பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி மரங்களின் பயன்களை பற்றி எடுத்துக்கூறினர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் ரமலான் பண்டிகை வந்ததால் மசூதிகளில் தொழுகை முடித்து சென்றவர்களுக்கு இந்த அமைப்பினர், வீடுகளில் கொண்டு போய் நடுவதற்கு இலவசமாக பாரம்பரிய நாட்டு மரங்களை வழங்கி ரமலான் வாழ்த்து சொல்லி அசத்தினர்.

தொடர்ந்து, இதகுறித்து இந்த அமைப்பினர் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சிதம்பரம் கூறுகையில், "தமிழகத்தில் வளர்ச்சி என்ற போர்வையில் மரங்கள் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக நம்முடைய பாராம்பரிய மண்ணின் மரங்கள் அழியும் நிலையில் உள்ளன. அதனால், உலக சுற்றுச்சூழல் தின நாளில் மருதம் மரம், கடம்பு, இலுப்பை, நாவல், புங்கை, அரசமரம், பூவசரன், வேம்பு, அத்தி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினோம்.

இந்த மரக்கன்றுகள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. நிழல் தரம். புயல், மழைக்கு இந்த மரங்கள் உடையாது. கம்பீரமாக நிற்கும். அதனாலே, இந்த நாட்டு மரக்கன்றுகளை வழங்கினோம். மக்களும் எங்களிடம் மரக்கன்றுகளை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். ஒரே நாளில் மொத்தம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளோம்.

மரக்கன்றுகளை வழங்குவதோடு நிற்காமல் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 25 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து அதையும் பொதுமக்களுக்கு மரங்களுடன் சேர்த்துக் கொடுத்தோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x