Last Updated : 08 Jun, 2019 04:02 PM

 

Published : 08 Jun 2019 04:02 PM
Last Updated : 08 Jun 2019 04:02 PM

ஆய்வுப் பணியை மீண்டும் தொடங்கிய கிரண்பேடி; கனகன் ஏரியில் ஆய்வு செய்தார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு மீண்டும் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். நகரப் பகுதிகளில் உள்ள வாய்க்கால் மற்றும் கனகன் ஏரிகளை ஆய்வு செய்தார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே துணைநிலை ஆளுநர் ஆய்வு செய்யக்கூடாது, அதிகாரிகளை அழைத்து தன்னுடைய அறையில் கூட்டம் போடக்கூடாது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி வருவதோடு, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருக்கிறது என்றும் கூறி வருகிறார்.

துணைநிலை ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததன் காரணமாக ஆய்வுக்குச் செல்லாத துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (சனிக்கிழமை) தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை என எதற்கும் எந்தவிதத் தகவலும் இன்றி திடீரென தனது ஆய்வைத் தொடங்கினார்.

ராஜ் நிவாஸில் இருந்து சைக்கிள் மூலம் சென்ற கிரண்பேடி, ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய வாய்க்கால், கதிர்காமம் பகுதியில் உள்ள கனகன் ஏரியை தனது ராஜ் நிவாஸ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். ஏரியைப் பார்வையிட்ட அவர் அதிகாரிகளிடம் அதுதொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ராஜ்நிவாஸ் வந்தார்.

இதனிடையே ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் கூறியிருப்பதாவது:

''நாளை (ஜூன் 9) எனது 70-வது பிறந்தநாளை புதுச்சேரிக்கு அர்ப்பணித்துள்ளேன். எதிர்காலத்தை பசுமை புதுச்சேரியாக மாற்ற தானும் ஆளுநர் மாளிகை குழுவும் தொடர்ந்து பயணிக்க உள்ளோம். பசுமை புதுச்சேரியாக மாற்ற நீர்நிலை மிகுந்த இடங்களான குளம், குட்டைகள், ஏரிகள் போன்ற இடங்களில் மரங்களை நட வேண்டும். மேலும் பொது இடங்களான காடுகள், பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து இடங்களிலும் மரங்களை நடலாம்.

ஒவ்வொரு வார இறுதியிலும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் முடிவு செய்து மரங்களை நட ஆளுநர் மாளிகை குழு செயல்படும். அதற்கான இடங்களும் ஒவ்வொரு வார ஆய்வின் முன்பே தெரிவிக்கப்படும். இப்பணியில் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் அங்கே பங்கேற்கலாம்.

2016-ல் வளமான புதுச்சேரியும், 2017-ல் தூய்மையான புதுச்சேரியும், 2018-ல் நீர் ஆதாரம் மிகுந்த புதுச்சேரியும் என மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 2019-ல் பசுமை புதுச்சேரி எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் கொடுத்த இவ்வாழ்வை இதைவிட வேறு வழியில் நல்ல காரியங்களுக்கான முறையில் செயல்படுத்த முடியாது''.

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x