Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM

டெல்லியில் இன்று சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் திமுக சார்பில் கனிமொழி பங்கேற்பு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் இன்று அளிக்கும் இரவு விருந்தில் மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சுகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி அமைக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களிடம் 3-வது அணி தொடர்பாக கடந்த 3-ம் தேதி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

மம்தா பானர்ஜியுடன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், ‘‘திமுக தற்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்’’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று இரவு விருந்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்க பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பாஜக, தற்போது 20-க்கும் அதிகமான மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுக்கவும், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கவும் அஸ்திவாரமாக இந்த விருந்து நிகழ்ச்சி அமையும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பதிலாக அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்க இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x