Published : 16 Mar 2018 06:05 PM
Last Updated : 16 Mar 2018 06:05 PM
சந்திரபாபு நாயுடு கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வண்ணம் அதிமுகவும் ஆதரிக்கவேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. பின்னர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் சபாநாயகரிடம் கடிதம் அளித்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளது. தெலுங்கு தேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வில் சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT