Published : 02 Mar 2018 08:03 PM
Last Updated : 02 Mar 2018 08:03 PM

ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேசுவரம் கடலில் கரைக்க ஏற்பாடு

ராமேசுவரத்தில் ஸ்ரீதேவியின் அஸ்தி கரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகவும் அவர் திரும்பாததால் கணவர் போனி கபூரும் ஓட்டல் ஊழியர்களும் அவரை மீட்டு அருகில் உள்ள ரஷித் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஸ்ரீதேவியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. குளியலறைத் தொட்டியின் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிப்ரவரி 28 அன்று ஸ்ரீதேவியின் உடல் மும்பை அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ், செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் கரைக்கப்பட உள்ளதாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் ராமேசுவரம் சென்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தியை கரைக்க உள்ளதாகவும், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அஸ்தி கரைக்கப்படலாம் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x