Published : 22 Mar 2018 08:09 AM
Last Updated : 22 Mar 2018 08:09 AM

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் 2 திருநங்கைகளுக்கு நியமன ஆணை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் திருநங்கைகள் (மூன்றாம் பாலினம்) எஸ்.நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகியோர் வார்டு மேலாளராக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் இவர்கள் முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

எஸ்.நேயா, நுண்ணுயிரியல் படிப்பில் முதுகலைப் பட்டமும், எம்.பி.செல்விசந்தோசம் இயன்முறை சிகிச்சைப் படிப்பில் பட்டயமும் பெற்றிருந்ததால் பரிசீலனை செய்த தமிழக அரசு, இவர்கள் அதிக கல்வித் தகுதி பெற்று இருந்தும், வயது வரம்பை கடந்து விட்டதால், இவர்களின் கோரிக்கையை சிறப்பு நேர்வாக ஏற்றது. இவர்களை அரசு பொது மருத்துவமனையில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்ய அரசு முடிவு செய்தது.

அதன்படி எஸ்.நேயாவை ஆய்வக நுட்புனர் நிலை-2 மற்றும் எம்.பி.செல்வி சந்தோசத்தை இயன்முறை சிகிச்சையாளர் நிலை-2 ஆகிய பணிகளில் நியமித்து, அதற்கான பணி நியமன ஆணைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x