Published : 30 Mar 2018 08:36 AM
Last Updated : 30 Mar 2018 08:36 AM

திமுக செயற்குழு இன்று கூடுகிறது: காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு

காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக திமுக தலைமை செயற்குழுவின் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் செயற்குழு கூட்டத்துக்கு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

இதில், பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கெடு முடிந்துள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறை நிரப்பும் போராட்டம்

கடந்த 25-ம் தேதி ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவோம்’’ என்று தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பொதுவேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முழு அடைப்பு

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் அல்லது முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது குறித்து திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

செயற்குழு கூட்டம் முடிந்ததும் அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளின் கூட்டத்தை கூட்டி போராட்டத்துக்கான தேதியை முடிவு செய்ய ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x