Published : 20 Mar 2018 09:15 AM
Last Updated : 20 Mar 2018 09:15 AM
கோவூர் அருகே மின் கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க சென்றபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலியானார்.
குன்றத்தூர் கோவூர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் ஹரிஸ்(14), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் காற்றாடியின் நூல் சிக்கியது. ஹரிஸ் அதை எடுக்க முயன்றபோது, அவரை மின்சாரம் தாக்கியது.
போலீஸார் விசாரணை
அருகில் இருந்த நண்பர்கள் இதைப் பார்த்து கூச்சலிட்டனர். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஹரிஸை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஹரிஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “இந்தப் பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாகவே உள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் கைக்கு எட்டும் தூரத்தில் மின் சார கம்பிகள் இருப்பதால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. குன்றத்தூர் பகுதியில் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சீரமைக்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT